
சென்னை: செப். 17-ம் தேதி ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று செப். 18-ம் தேதியை (திங்கள்கிழமை) அரசு விடுமுறை நாளாக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் கடந்தாண்டு இறுதியில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டது. அதில், செப். 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம், சதுர்த்தி திதியானது செப். 18-ம் தேதி வருவதாக குறிப்பிட்டு, பல்வேறு தரப்பினரும் அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அரசு விடுமுறை தினத்தை செப். 18-க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப். 18-ம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்