
மதுரை: தனக்கு கிடைக்காத போதிலும், இளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரியின் நிறுவனர் தியாகராசர் என இக்கல்லூரியின் பவளவிழா குறித்த நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு (75-ஆண்டு) கல்வியின் திறந்த கதவுகள் (தி டோர்ஸ் டு எஜூகேஷன்) என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கல்லூரியின் செயலர் க.ஹரி.தியாகராசன் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, நூலை வெளியிட்டு பேசியதாவது:
இக்கல்லூரியை உருவாக்கிய கருமுத்து தியாகராசர் சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்றவர். நதிக்கரை அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்று, நாமும் நதிக்கரையில் கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும் என திட்டமிட்டார். இதன்படி, வைகை நதிக்கரை மற்றும் தெப்பக்குளம் கரையையொட்டி இக்கல்லூரியை தோற்றுவித்தார். அவருக்கு உயர்கல்வி படிக்க, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மதுரையிலுள்ள இளைஞர்களுக்கு இக்கல்லூரி மூலம் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்தவர். இக்கல்லூரிக்கு காமராசர் உட்பட சிறந்த தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களின் கையெழுத்தை பார்க்கும்போது, அதுவே இக்கல்லூரியின் பெருமையை காட்டுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்