
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் வரும் 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும், பட்டங்களும் இவ்விழாவில் நேரடியாக வழங்கப்படும். இதர மாணவர்களுக்கான பட்டச் சான்றிதழ்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக்கழக இணையதளத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று பல்கலைக்கழக பதிவாளர் கே.ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்