
சென்னை பெரியமேட்டில் உள்ளமத்திய அரசின் மருந்து கிடங்கிலிருந்து 2.50 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பெற்றுக் கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி இல்லாத நிலையில், மத்திய அரசிடம் முதல்வர் பேசி வந்தார். இதைத்தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஹைதராபாத், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்னைக்கு தடுப்பூசி வரும். ஆனால் அவசரத்துக்கு இங்குள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதால், துறையின் அலுவலர்கள் இங்கிருந்து தடுப்பூசிகளை எடுத்து தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கான பணிகளை செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்