
வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: ‘‘இந்திய சுதந்திர போராட்டம் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறுவார்கள். ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அனலும், கனலும் தெறித்த ஊர் தான் இந்த வேலூர். இந்தியர்கள் அடிமைகளாக வாழ தயாரில்லை என்று தெரிவித்த வேலூர் புரட்சி நடந்த இந்த கோட்டை மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்