
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு மண்டலகாவல்துறை தலைவர் சுதாகரிடம் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திரபாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். மேலும், ‘இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும்' என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திரபாலாஜி பேசினார். தொண்டாமுத்தூர் வரும்போது மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்