
சென்னை: குடியரசு தினத்தன்று சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியரசு தினமான நேற்று சென்னையில் வ.உ.சிதம்பரனார், அன்னி பெசன்ட் அம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆக. 13-ம் தேதி, `சுதந்திரம் மற்றும் குடியரசு தினவிழா நாட்களில் கேட்பாரற்று கிடக்கும் தலைவர்களின் சிலைகள்: அலங்கரித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற தலைப்பில் `இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, “நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதன்முறையாக பெரும்பாலான தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்