
உதகை: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சார்ந்துள்ள சுமார் 10,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மலை காய்கறிகள் மற்றும் தேயிலையை தவிர அனைத்து உணவு, கட்டுமானம் உட்பட்ட பொருட்களுக்கு சமவெளிப் பகுதிகளையே நம்பியுள்ளது. இதனால் மாவட்டத்தில் அனைத்து பொருட்களின் விலையும் சமவெளிப் பகுதிகளை விட சற்று கூடுதலே. தக்காளி, வெங்காயத்துக்கு மைசூரையும், அரிசிக்கு தஞ்சையையும், பிற காய்கறிகளுக்கு பிற மாவட்டங்களையும் நம்பியுள்ளது. இதேபோல கட்டுமான பொருட்களான மணலுக்கு கரூரையும், செங்கற்களுக்கு சென்னை, காஞ்சி மற்றும் கோவையையும், கம்பிகள் கோவையையும் நீலகிரி மாவட்டம் நம்பியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வீடு கட்டினால் சமவெளிப்பகுதிகளை விட இரண்டு மடங்கு பணம் தேவை. இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் வீடு கட்டுவது கனவாகிவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்