
சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி இரவு மது போதையில் பைக் ஓட்டி வந்த இளைஞர் போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனையில் சிக்கினார். இதையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த இளைஞர் அபராதத்தை செலுத்திவிட்டு அதற்கான ரசீதை அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் கொடுத்துவிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தருமாறு கூறியுள்ளார்.
அப்போது ஆய்வாளர் நாகராஜன், தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் வாகனத்தை விடுவிப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் தன்னிடம் ரூ.1000 மட்டுமே உள்ளது என கூறி பணத்தை கொடுத்தார். நாகராஜன் லஞ்சம் வாங்கிய காட்சியை அந்த இளைஞர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்