
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இருவரை, காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு இன்று (செப்.27) அழைத்து வந்து விசாரித்தனர்.
கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான், முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(28), பெரோஸ்கான்(28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை, துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்