
தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. வாழ்நாளில் சிறுகச்சிறுக சேமித்து வாங்கிய ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களை வெள்ளம் விழுங்கிக் கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்