
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் பாதிப்பைக் குறிப்பிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக, வருவாய் நிர்வாக ஆணையர் உரிய முன்மொழிவுகளை அனுப்பினார். அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்