
கோவை: மத்திய அரசு வழங்கிய, பத்மஸ்ரீ விருது கிராமிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலைஞரான பத்ரப்பன் (87) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு கற்றுத் தருவதையும், பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பத்ரப்பனுக்கு மனைவி, மகன், மகள் இருந்தனர். மனைவி, மகன் உடல்நலக்குறைவால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர். தற்போது மகள் வீட்டில் பத்ரப்பன் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்