
கோவை அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலையில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமாக 14.61 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தமிழ்நாடு கோழி அபிவிருத்தி நிறுவனம் (டாப்கோ) கடந்த 1966-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித பயன்பாடும் இல்லாமல் அங்குள்ள கட்டிடங்கள் பாழடைந்துள்ளன. எனவே, அந்த இடத்தை சீரமைத்து ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சத்தியகுமார் கூறியதாவது:
கோழி வளர்ப்பில் தனியார் நிறுவனங்கள் அதிகரித்ததால், தொடர்ந்துபல ஆண்டுகள் செயல்பட்டுவந்த இந்த நிறுவனம், நஷ்டத்தால் மூடப்பட்டுவிட்டது. முன்பு இங்கு கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதத்தில் விவசாயிகளுக்கு வாரந்தோறும் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் பயனடைந்தனர். எனவே, தற்போது இங்கு ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைத்தால் கோவை, திருப்பூர்மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். இங்கு ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதன் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு வெற்றிகரமாக சந்தைப்படுத்துதல் பயிற்சி, பொருளாதார ரீதியிலான வழிகாட்டும் பயிற்சி, பால்வளப் பெருக்கம், கால்நடைகள் வளர்ப்பின் நவீன யுக்திகளை கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளிக்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்