
நாட்டின் எதிர்காலமான சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வறுமை, கடன் உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு அனுப்பி, அவர்களை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றும் பழக்கத்தை தடுக்க, கடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2006-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவ சிறார்களை, கடினமான வேலை கொண்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
உலகளவில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அதில் 9 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளை செய்வதாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகத்தினரின் புள்ளிவிவரப்படி, தொழில் வளம் மிகுந்த கோவையில், 2020-21-ம் ஆண்டில் இதுவரை 13 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2019-20-ல் 50 பேரும், 2018-19-ல் 12 பேரும், 2017-18-ல் 13 பேரும், 2016-17-ல் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்