
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக். 6, 9 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தங்கள் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன் கடிதம் வழங்கினார். அதில், ‘கடந்த ஏப்ரலில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கியது. அதுபோல உள்ளாட்சித் தேர்தலிலும் விவசாயி சின்னம் ஒதுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்