
திருச்சியில் நடந்த வணிகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், "கரோனா காலத்தில் ஊரடங்கு, கடைகளைத் திறக்க முடியாத ஒரு கொடுமை, அந்தச் சூழல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, நிதி உதவி வழங்கியிருக்கக்கூடிய வணிகர்களே உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்முடைய தமிழகத்தின் சார்பில், தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அந்தப் பணியை நாம் தொடங்கியிருக்கிறோம். அதற்கும் நீங்கள் உதவ வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்து காலக்கட்டத்திலும் வணிகர்களின் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசாகச் செயல்பட்டு வந்துள்ளோம் என்பதை நீங்கள் யாரும் மறக்க மாட்டீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில், வணிகர்களின் நலனைக் காப்பதற்காக வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு அதனால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அதிகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே புதிய நலத் திட்ட உதவிகள் வணிகர் நல வாரியத்தால் வணிகப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தவர் கலைஞர் தான். அதைப் பின்பற்றியே இன்றைய ஆட்சியும் நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்