
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து, கடந்த 12-ம் தேதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி, அதே மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்