
சென்னை: சென்னையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை பெரும்பாக்கம், கலைஞர் நகர் முத்துமாரியம்மன் கோயில் 2-வது தெருவை சேர்ந்த சிறுவன் ஆர்யா (14). மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லும் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிறுவன் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்