
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பான கடிதங்கள் பேரவைத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதால், இருக்கையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று காலை 9.20 மணி முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவை அரங்குக்கு வரத் தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கு அவைக்குள் வந்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு 10 மணிக்கு அவைக்குள் வந்தார். அவர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அ.மு.அப்துல் இப்ராஹிம் (கடலாடி), கே.கே.வீரப்பன் (கபிலர் மலை), ஏ.எம்.ராஜா (பவானி), எஸ்.பி.பச்சையப்பன் (சங்கராபுரம்), எஸ்.புருஷோத்தமன் (அரியலூர்), பெ.சு.திருவேங்கடம் (கலசப்பாக்கம்), தே.ஜனார்த்தனன் (விழுப்புரம்), பே.தர்மலிங்கம் (பாளையங்கோட்டை), எம்.ஏ.ஹக்கீம் (மதுரை மத்தி), கோவை தங்கம் (வால்பாறை) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்