
கோவை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் படத்தை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கான கூட்டரங்கு உள்ளது. இக்கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்களான கோபால்சாமி, சங்கீதா ஆகியோர் வந்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தையும் எடுத்து வந்தனர். கூட்டரங்கில் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இருவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, பாஜகவினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்