
பெங்களூருவை சேர்ந்த சங்கமேஸ்வரன் (67) கடந்த 2019 அக்டோபர் 13-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக கர்நாடக போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். நீண்ட நேரம் பேருந்து வராததால் வேறு பேருந்தில் பெங்களூரு திரும்பிய அவர், கேஎஸ்ஆர்டிசி நிர்வாக இயக்குநரிடம் புகார் அளித்தார்.
பெங்களூரு 2-வது நகர்ப்புற கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் அவர் புகார் அளித்தார். அப்போது கேஎஸ்ஆர்டிசி தரப்பில், ''பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை போலீஸார், பேருந்து நிற்கும் இடத்தை மாற்றிவிட்டனர். இதுகுறித்து அனைத்து பயணிகளுக்கும் அரை மணி நேரத்துக்கு முன்பே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. சங்கமேஸ்வரன் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், பெங்களூரு திரும்பிவிட்டோம்''என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து நுகர்வோர் ஆணையம், ''பயணி மூத்த குடிமகன் என்பதால் அவரை தொடர்பு கொண்டு நடத்துநர் பேசி இருக்க வேண்டும். அவரது டிக்கெட் முன்பதிவு பணம் ரூ. 497, பெங்களூரு திரும்ப செலவழித்த ரூ. 200, இழப்பீடாக ரூ.1,000-ஐ கேஎஸ்ஆர்டிசி அதிகாரிகள் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்