
சென்னை: கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம், புதுச்சேரியின் அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் ஏப்.17-ம்தேதி முதல் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே வழக்கு விசாரணை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி வழக்குகள் காணொலி காட்சி வாயிலாகவும் நடந்து வருகிறது. இந்த சூழலில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் வரும் ஏப்.17 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்