
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. வாணியம்பாடி-செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து ஊத்தங்கரை வரை சாலை விரிவாக்க பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல, திருப்பத்தூரில் இருந்து தருமபுரி வரை செல்லும் பிரதான சாலையில் 3 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்பணிக்காக அங்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப்பாதையில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்